அமித்ஷா வருகைக்கான காரணம் இன்று தெரியும்: அண்ணாமலை பேட்டி

24

சென்னை: ''மாநில தலைவர் தேர்தலுக்கும், அமித்ஷா வருகைக்கும் தொடர்பில்லை. வருகைக்கான காரணம் இன்று தெரியும்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில், நேற்று (ஏப்ரல் 10) குமரி அனந்தன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய பிறகு,
செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அதன் விபரம் பின்வருமாறு:

நிருபர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார். இந்த பயணத்தின் போது புதிய மாநில தலைவர் அறிவிக்க வாய்ப்பு இருக்கா? அ.தி.மு.க., உடன் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா?



அண்ணாமலை: மத்திய உள்துறை அமைச்சர் இன்று மாலை வரை இருக்கிறார்கள். எதற்கு வந்து இருக்கிறார் என்று இன்று அதிகாரபூர்வமாக தெரிவிப்போம். மாநில தலைவர் தேர்தலுக்கும், அமித்ஷா வருகைக்கும் சம்பந்தமில்லை.


அவர் வருவது கட்சியின் தலைவர்களை சந்திப்பதற்கு, எப்போதும் அவர் சந்திப்பார். பீஹாரில் 4 நாட்கள் இருந்தார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தார். அரசியல் நிலவரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். தமிழகத்திலும் அதே போன்ற பயணமாக தான் பார்க்க வேண்டும். முறைப்படி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவிப்போம்.



நிருபர்: முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினார். நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டம் தொடரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



அண்ணாமலை: தீர்மானம் நிறைவேற்றுவது புதிது கிடையாது. இதற்கு முன்பு கூட தீர்மானம் நிறைவேற்றினார்கள். நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு தான் போகிறது. மாநில அரசு அனுப்பிய தீர்மானத்தை ஜனாதிபதி திரும்ப அனுப்பினார்.


எங்களை பொறுத்தவரை நீட் தேர்வு நல்லது தான் செய்து கொண்டு இருக்கிறது. ஏழை மாணவர்கள் நீட் தேர்வால் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போய் கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு நீட் விவாதம் தேவையற்றது. இதனால் தான் அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்கவில்லை.
நிருபர்: தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு கவர்னருக்கு பின்னடைவா?

அண்ணாமலை: பின்னடைவாக நான் பார்க்கவில்லை. சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு முக்கியமானது தான். மசோதா விவகாரத்தில் காலநிர்ணயத்தை சுப்ரீம்கோர்ட் விதித்துள்ளது.



சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பிற்கு தலை வணங்கி தான் ஆக வேண்டும். இது நாட்டின் அடிப்படை. 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. கவர்னர் தொடர்ந்து தனது கடமையை செய்வார்கள்.

Advertisement