முதல்வர் நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளி பஸ்களா: அண்ணாமலை எதிர்ப்பு

35

சென்னை: திருவள்ளூரில் நடக்க உள்ள முதல்வர் நிகழ்ச்சிக்கு தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் இயங்கும் பஸ்களை அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சுற்றறிக்கை அனுப்பியதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 19ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகவும், அதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகளில் இயங்கும் பேருந்துகளை, இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திமுக அரசு நடத்தும் நிகழ்ச்சிகள் என்றாலே, பொதுமக்கள், வணிக நிறுவனங்களிடம் வசூல் வேட்டை முதற்கொண்டு, கூட்டத்தை காட்டுவதற்காக, நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான ஊதியம் தரமாட்டோம் என்று கூறி ஏழை எளிய மக்களை மிரட்டி அழைத்து வருவது, தனியார் பள்ளி, கல்லூரிகளை மிரட்டி வாகனங்களை வாங்குவது என, அடாவடித்தனம் செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறது திமுக.


தென்காசியில், அரசு மருத்துவர்களிடமே கட்டாய வசூல் வேட்டை நடத்தப்பட்ட செய்திகள் நேற்று வெளிவந்தன. இப்படி, பொதுமக்களுக்குத் தொடர்ந்து இன்னல்களைக் கொடுக்கும் திமுகவின் இந்த அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.


உங்கள் கட்சிக்காரர்களிடம் இல்லாத கல்லூரிகளா, பள்ளிகளா? எதற்காக, சாமானிய மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமல கூறியுள்ளார்.




சட்டவிரோத மது விற்பனை



அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு பதிவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பல ஆயிரம் கோடி டாஸ்மாக்கில் பல ஆயிரம் கோடி ஊழல் நடக்கிறது. இன்று மகாவீர் ஜெயந்தி. மதுபானக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், புதுக்கோட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இந்த சட்டவிரோத விற்பனை அனைத்தும் கணக்கில் காட்டப்படாத விற்பனை ஆகும். அவை நேரடியாக தி.மு.க., அமைச்சரின் பைகளில் சென்று சேர்கிறது. தி.மு.க.,வின் பேராசைக்கு எந்த இடையூறும் இல்லை. இன்று தமிழகத்தில் இந்த அமைப்பு கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடக்கும் கொள்ளைகள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement