காதலனுடன் சென்ற மகள் கொலை: நாடகமாடிய தந்தை கைது

2

பாட்னா: பீஹாரில் காதலனுடன் சென்றதால் மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பீஹாரில் உள்ள சமஸ்திபூரில் முகேஷ் சிங், முன்னாள் ராணுவ வீரர், இவரது மகள் சாக்ஷி 25, தனது காதலனுடன் டில்லிக்கு சென்ற பிறகு காணமால் போனதாக கூறப்பட்ட நிலையில், சந்தேகம் அடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

சாக்ஷியின் தாய் மாமன் விபின் குமாரிடம் விசாரித்ததில், சாக்ஷி கடந்த மார்ச் 4 ம் தேதி காதலனுடன் டில்லிக்கு சென்றுவிட்டார்.

சாக்ஷி, கல்லூரியில் தன்னுடன் படித்து வரும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இதனால் சாக்ஷியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து காதலர்கள் இருவரும் கடந்த 4ம் தேதி டில்லிக்கு சென்றுவிட்டனர்.

சில நாட்களுக்கு பின்னர், சாக்ஷியிடம் வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் என்று தந்தை கூறியுள்ளார்.
இதனை ஏற்று சாக்ஷி, தனது வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. பிறகு சாக்ஷியை காணவில்லை. இது குறித்து தாயார் கேட்டதற்கு சாக்ஷி மீண்டும் காணாமல் போனதாக கணவர் கூறியுள்ளார்.


இதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கினோம். முகேஷ் சிங் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்திய போது, பூட்டிய குளியறையில் துர்நாற்றம் வீசியது. கதவை உடைத்து சாக்ஷியின் உடலை மீட்டோம். இந்த சம்பவம் கடந்த ஏப்.7 ம் தேதி நடந்திருக்கிறது. சந்தேகத்தின் பேரில் முகேஷ் சிங்கிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்,

Advertisement