2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் ஸ்டாலின்

90

சென்னை: 'தமிழகத்தில் 2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார் குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 2 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.357.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, விழாவில் அவர் பேசியதாவது; கடந்த அ.தி.மு.க.,வின் இருண்ட ஆட்சி காலத்தில் முடங்கி கிடந்த உள்கட்டமைப்பு பணிகள், கடந்த 4 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இன்று மட்டும் ரூ.390 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். ரூ.418 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்துள்ளேன்.

இன்று மட்டும் 63 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப் போகிறேன். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலேயே இங்கு தான் அதிக பட்டாக்களை தரப் போகிறேன். இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு 5 அறிவிப்புகளை வெளியிடப்போகிறேன்.

1. கடம்பூர் ஊராட்சி ஒன்றியம், தண்டலம், கலசவநலத்தூர் சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20.37 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.

2. திருவாலாங்காடு ஊராட்சி ஒன்றியம், மணவூர் லட்சுமி விலாசபுரம் சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.23..47 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்

3. திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில், ரூ.2.27 கோடியில் தாமரைக்குளம் மேம்படுத்தக் கூடிய பணிகள்

4. பழவேற்காடு ஏரி பகுதியில் சூழலியல் சுற்றுலாத் தலம் ஏற்படுத்தப்படும். வைரவன் குப்பம் மீனவர் கிராமத்திற்கு, வலைபின்னும் கூடம் அமைக்கப்படும்

5. திருமழிசை - ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும், என அறிவித்தார்.

தொடர்ந்து, பேசிய முதல்வர்; இந்தியாவில் உள்ள அனைத்து மாநில உரிமைகளுக்காகவும் தான் தமிழகம் போராடுகிறது. மாநில உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும் செய்யாததால் தான், கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம்.

தி.மு.க.,வின் பவர் என்ன என்பது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய மக்களுக்கே இப்போது தெரிந்திருக்கிறது. திசை மாறி சென்றிருப்பவர்கள், திசைகாட்டியாக இருக்கும் எங்களை பார்த்து புலம்ப வேண்டாம்.

மத்திய அமைச்சர் அமித் ஷாவால் நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியும் என்று சொல்ல முடியுமா? ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா? தமிழகத்திற்கு இவ்வளவு சிறப்பு நிதி கொடுத்துள்ளோம் என்று பட்டியல் போட முடியுமா? தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் எண்ணிக்கை குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா?

பிரதமர் ராமேஸ்வரத்திற்கு பாலத்தை திறக்க வந்தார்கள். அதனை விமர்சிக்க விரும்பவில்லை. எவ்வளவு நிதி கொடுத்தாலும் அழுகிறார்கள் என்று விமர்சனம் செய்தார். மத்திய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் பிச்சைக்காரர்களா? என்று நீங்கள் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? நான் அழ வில்லை. இது தமிழகத்தின் உரிமை. மாநிலங்கள் சுயாட்சி அதிகாரம் பெற்றிருந்தால் தான், இங்குள்ள மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முடியும். டில்லியின் ஆளுமைக்கு தமிழகம் என்றும் அடிபணியாது.

பிற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியமைக்கும் பா.ஜ., வியூகம் தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான். நீங்கள் எத்தனை பரிவாரங்களை சேர்த்துக் கொண்டு வந்தாலும் ஒருகை பார்க்க தி.மு.க., தயார். அடுத்த ஓராண்டில் நீங்கள் எப்படியெல்லாம் எங்களை மிரட்டுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement