திருச்சி - சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானம் இயக்கப்படுமா?

சென்னை:திருச்சி - சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேஷியா, துபாய், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, தினமும் மற்றும் வாராந்திர அடிப்படையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. உள்நாட்டு விமான சேவையிலும் திருச்சி நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதற்கிடையே, தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூருக்கு, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட், இண்டிகோ' நிறுவனங்கள் சார்பில், தினமும் ஐந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ளதால், பலர் சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அதனால், இந்த ஐந்து விமானங்களிலும் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.

எனவே, திருச்சி - சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என, பயணியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, வேலை மற்றும் சுற்றுலாவுக்காக பலர் சிங்கப்பூர் செல்கின்றனர். நடப்பாண்டு பயணியர் வருகையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இரவு செல்லும் 'ஸ்கூட் ஏர்லைன்ஸ்' விமானம் முழுதும் நிரம்பி விடுகிறது. மற்ற விமானங்களிலும் இதே நிலைதான்.

இந்த நிலை தொடர்ந்தால், சிங்கப்பூர் செல்ல, மற்ற நகரங்களை தேடிச் செல்லும் சூழ்நிலை உருவாகும். எனவே, சிங்கப்பூருக்கு கூடுதல் விமான சேவை வழங்க, திருச்சி விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்கப்பூர் விமான நிறுவனங்கள் முன்வந்தால் நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement