முன்னாள் அமைச்சர் வேலுமணி வலதுகரமாக இருந்த வடவள்ளி சந்திரசேகர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகல்

4

கோவை:முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வலதுகரமாக அ.தி.மு.க.,வினரால் அறியப்பட்ட, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில இணை செயலாளரான வடவள்ளி சந்திரசேகர், கட்சி பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்; எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில இணை செயலாளராக இருந்தார். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய நண்பர் மற்றும் வலதுகரமாக கட்சியினரால் அறியப்பட்டவர். அச்சமயத்தில் அதிகாரமிக்கவராக வலம் வந்தார். கட்சியினர் மட்டுமின்றி, அரசு அதிகாரிகளும் அவரது இல்லத்துக்குச் சென்று காரியங்கள் சாதித்து வந்தனர்.

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்பினார். தெற்கு தொகுதியை பா.ஜ.,வுக்கு ஒதுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால், மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனனுக்கு வடக்கு தொகுதி வழங்கப்பட்டது.

அதனால், உள்ளாட்சி தேர்தலில் அவரது மனைவி ஷர்மிளாவை போட்டியிடச் செய்து, மேயராக்க திட்டமிட்டனர். அதன்படி, அவரது மனைவியும், 38வது வார்டில் போட்டியிட்டு, கவுன்சிலரானார். அத்தேர்தலில் மூன்று வார்டுகளில் மட்டுமே அ.தி.மு.க., வெற்றி பெற்றதால் மேயர் கனவு கலைந்தது.

கடந்த, 2022ல் வேலுமணி வீடு மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்தபோது, சந்திரசேகரும் சிக்கினார். அவரது வீட்டில் ஒன்பது மணி நேரம் சோதனை நடந்தது. ஆவணங்கள், லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றிச் சென்றனர்.

அச்சம்பவத்துக்கு பின், அ.தி.மு.க., நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். தேவைப்படும் சமயங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். அவரை தி.மு.க.,வுக்கு இழுப்பதற்கான முயற்சிகள் சில மாதங்களாக மறைமுகமாக நடந்து வந்தது. இதற்கிடையே, தனிப்பட்ட காரணங்களுக்காக, கட்சியில் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக, சந்திரசேகர் நேற்றிரவு அறிக்கை வெளியிட்டார். இதுதொடர்பாக, சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டுள்ளார். அவரை சமாதானம் செய்யும் முயற்சியில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கவுன்சிலர் பதவி?




வடவள்ளி சந்திரசேகர் மனைவி ஷர்மிளா, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். அவர், அப்பதவியில் தொடர்வாரா அல்லது ராஜினாமா செய்யப் போகிறாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Advertisement