மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை

ராமேஸ்வரம்:கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை தமிழகத்தில் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு மீன்துறையினர் தடை விதித்தனர்.

கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் சீசனாக உள்ளதால் இச்சமயத்தில் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றால் மீன்கள் உற்பத்தி பாதிப்பதுடன் மீனவர்களுக்கும் மீன்வரத்தின்றி நஷ்டம் ஏற்படும். ஆகையால் கோடை காலத்தில் இரு மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என கடல்சார் விஞ்ஞானிகள் அறிவுறுத்தினர்.

அதன்படி 2001 முதல் கோடை காலத்தில் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. வழக்கம் போல் இந்த ஆண்டு ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முதல் சென்னை வரை உள்ள 8000 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் ஏப்.,13 முதல் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைக்க உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement