மின் மயானம் செயல்படுவதில் குழப்பம்: தேவகோட்டையில் அதிகாரிகள் மெத்தனம்

தமிழகத்திலேயே மயானம் இல்லாத நகராட்சி தேவகோட்டை தான். பல போராட்டங்களை தொடர்ந்து ராம்நகர் எல்லையில் ரூ. ஒரு கோடியில் நவீன எரிவாயு மயானம் கட்டப்பட்டது. எட்டு ஆண்டுகளாகியும் மயானம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

அ.தி.மு.க.., ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி 15 நாளில் மயானம் செயல்படுமென உறுதி அளித்தார்.

உறுதி கூறி ஆறு ஆண்டு ஓடிவிட்டது. இது வரை பயனில்லை. தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டதை தொடர்ந்து கலெக்டர் செயல்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

இந்திய. கம்யூ. போராட்டம் அறிவித்தது. எரிவாயு மயானமாக மாற்றி இரண்டு மாதத்தில் திறக்கப்படும் என உறுதி அளித்தனர். நான்கு மாதங்களுக்கு மேலாகியும் திறக்கவில்லை.

இந்நிலையில் ஹிந்து முன்னணி உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர்.

அதற்குள் அவசரமாக டெண்டர் மூலம் தொண்டு நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டனர். கடந்த மாதம் 22 ந்தேதி பணி ஆணை வழங்கினர். நேற்று வரை மயானம் செயல்படவில்லை.

குத்தகை தாரர் சென்று பார்த்தபோது சில பொருட்கள் உடைந்து கிடந்தது. இந்த சூழ்நிலையில் சுத்தம் செய்து பழுதை சரி செய்ய சில நாட்கள் பிடிக்கும் என்ற நிலை உருவானது. உடைப்புகளையும், இடத்தையும் சீர் செய்தனர்.

தற்போது எரியூட்டுவதற்காக 10 எரிவாயு சிலிண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குத்தகைதாரர் மயானத்திற்கு பணியாளர்களையும் நியமித்து விட்டார். அனைத்து வசதிகளும் இருப்பதால் ரூ. 3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. குத்தகைதாரர் தயார் நிலையில் உள்ள நிலையில்,

இணைப்பு கொடுத்து உஷ்ண நிலை பற்றி செய்முறை செய்து பணியாளர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வராமல் இழுத்தடிக்கின்றனர்.

அனுமதி மறுப்பு: இந்நிலையில் செயல்படுத்தக்கோரி ஹிந்து முன்னணி சார்பில் மயானம் முன்பு உண்ணாவிரதம் அறிவித்து இருந்தனர். ஏப். 1 முதல் மயானம் செயல்படுவதாகவும் ஆகவே போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். செயல்படாத மயானம் செயல்படுவதாக போலீசார் கூறியிருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement