திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் இன்று காலை 8:30 மணிக்கு விமான மகா கும்பாபிேஷகமும்,காலை 8:50 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.

திருப்புத்துார் தென்மாப்பட்டில் காவல் தெய்வமாக பூமாயிஅம்மன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் மூலவராக எழுந்தருளியுள்ள சப்த மாதர்கள் பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் நடுநாயகமாக உள்ள வைஷ்ணவியை பூமாயி அம்மன்' ஆக பக்தர்கள் வழிபடுகின்றனர்.

கும்பாபிேஷகத்தை முன்னிட்டு ராஜகோபுரம்,விமானம், சப்தமாதர், பைரவர் ஆதிவிநாயகர், முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம் சன்னதி,கோயில் முன் மண்டப துாண்கள் பராமரிப்பு, சுதை வேலைப்பாடு, வண்ணப்பூச்சு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏப்.7 ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. பிள்ளையார்பட்டி கே.பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாக பூஜை செய்தனர்.

நேற்று இரவு வரை ஐந்து கால யாகபூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜை துவங்குகிறது. தொடர்ந்து காலை 7:00 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, காலை 7:35 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 8:30 மணிக்கு விமான,கோபுர மகா கும்பாபிஷேகம் , காலை 8:50 மணிக்கு மூலஸ்தான மகாகும்பாபிஷேகம் நடைபெறும். காலை 11:00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

மாலை 5:00 மணிக்கு மகாஅபிஷேகமும்,தீபாராதனையும், இரவு 6:30 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும். ஏற்பாடுகளை உபயதாரர், முன்னாள் தக்கார் நா.ஆறு.தங்கவேலு, தக்கார் து.பிச்சுமணி, செயல் அலுவலர் எஸ்.விநாயகவேல் செய்கின்றனர்.

Advertisement