பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 30 பயணியர் படுகாயம்

சிக்கமகளூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து சிருங்கேரிக்கு நேற்று, 40க்கும் மேற்பட்ட பயணியருடன் மாநில அரசுக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ், சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா பகுதியில் உள்ள மலை பாதையில் நேற்று சென்றது.

அப்போது, டிரைவர் வெங்கப்பாவின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், அப்பகுதியில் இருந்த ஓட்டு வீட்டின் கூரை மீது பஸ் மோதியது. வீட்டிற்குள் இருந்த கோவில் பூசாரி காயம் அடைந்தார்.

பஸ்சில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கி தவித்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் உடனடியாக உதவி செய்து அனைவரையும் மீட்டனர்.

படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்த பஸ் டிரைவர், மேல் சிகிச்சைக்காக கொப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement