தமிழக பா.ஜ., தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்

103

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து புதிய தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி ஆகி உள்ளது. இது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


அமைப்பு ரீதியாக தமிழக பா.ஜ.,வில், 67 மாவட்டங்கள் உள்ளன. அக்கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை, கடந்த ஆண்டு செப்டம்பரில் துவங்கியது. அதைத் தொடர்ந்து, நவம்பரில் கிளை அளவில் தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.



இந்தாண்டு ஜனவரியில், புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில தலைவர் பதவிக்கு, ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட இருந்தது. டில்லி சட்டசபை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் தாமதமானது. மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை(ஏப்.12) நடக்கிறது.


போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று (ஏப்.11) மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை விருப்ப மனுவை, மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் மட்டும் விருப்ப மனு தாக்கல் செய்தார்.



நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவில் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, பொன் பாலகணபதி உள்ளிட்டோர் பரிந்துரை செய்து கையெழுத்திட்டனர்.


விருப்ப மனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரனுக்கு பா.ஜ., மூத்த தலைவர்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். விருப்ப மனு தாக்கல் மாலை 4 மணி வரை நடந்தது. வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். இது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.



நயினார் நாகேந்திரன் பேட்டி

''நான் விருப்ப மனு மட்டும் தாக்கல் செய்துள்ளேன். கட்சி தலைமை முடிவு எடுக்கும். பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி.

கட்சி தலைமையின் அறிவுரைப்படி தலைவர் பதவிக்கு மனு கொடுத்துள்ளேன்'' என பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.




சென்னையில் கமலாலயத்தில் பா.ஜ., மாநில தலைவர் பெயர் பலகையில் இருந்து அண்ணாமலை பெயர் ஸ்கெட்ச் மார்க்கர் கொண்டு அடிக்கப்பட்டுள்ளது.

Advertisement