உலக வில்வித்தை: அரையிறுதியில் அபிஷேக்

புளோரிடா: உலக கோப்பை வில்வித்தை அரையிறுதிக்கு இந்தியாவின் அபிஷேக் முன்னேறினார்.

அமெரிக்காவில், உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 1') தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவு தகுதிச் சுற்றில் 12வது இடம் பிடித்த இந்தியாவின் அபிஷேக் வர்மா, 2வது சுற்றில் டென்மார்க்கின் ராஸ்மஸ் பிராம்சென் (147-142), 3வது சுற்றில் டென்மார்க்கின் மார்டின் டாம்ஸ்போவை (149-148) வீழ்த்தினார். அடுத்து நடந்த காலிறுதியில் அசத்திய அபிஷேக் 148-146 என்ற கணக்கில் சுலோவேனியாவின் டிம் ஜெவ்ஸ்னிக்கை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்கள் அணிகளுக்கான 'ரீகர்வ்' பிரிவு காலிறுதியில் இந்தோனேஷியாவை வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதியில் ஸ்பெயினை எதிர்கொண்டது. இதில் திராஜ், தருண்தீப் ராய், அடானு தாஸ் அடங்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. பைனலில் இந்தியா, சீனா அணிகள் மோதுகின்றன.
பெண்கள் அணிகளுக்கான 'ரீகர்வ்' பிரிவு காலிறுதியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. அன்ஷிகா குமாரி, அன்கிதா பகத், தீபிகா குமாரி இடம் பெற்ற இந்திய அணி 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Advertisement