வருஷநாட்டிற்கு சாலை வசதி கோரி வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : தேனி மாவட்டம் வருஷநாட்டிலிருந்து முறுக்கோடை உள்ளிட்ட சில கிராமங்களுக்கு சாலை வசதி கோரிய வழக்கில், மனுவை தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

முறுக்கோடை வழக்கறிஞர் விக்ரம் தாக்கல் செய்த பொதுநல மனு:

கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது முறுக்கோடை. அருகே காமராஜபுரம், தும்மக்குண்டு, வாலிப்பாறை உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. மக்கள் பின்தங்கிய நிலையில் உள்ளனர். வேலைவாய்ப்பிற்காக வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லை. மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய இக்கிராமங்களுக்கு வருஷநாட்டிலிருந்து சாலை அமைக்க வேண்டும். அலைபேசி அல்லது பைபர் நெட்வொர்க் வசதி செய்யக்கோரி தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தேனி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை இல்லை. மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement