டிரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: சீமான் 'கலகல'

16


சென்னை: ''டிரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி'' என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் பதில் அளித்தார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

அப்போது நிருபர்கள், தனித்து போட்டியா? கூட்டணி வைக்கும் வாய்ப்பு இருக்கா? என்று எழுப்பிய, கேள்விக்கு சீமான் அளித்த பதில்:

வாய்ப்பு இருக்கு, நீ ஒரு கட்சி ஆரம்பித்தால் நாம் இருவரும் கூட்டணி வைக்கலாம். ஒரே ஒரு கட்சி உடன் தான் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சி. எத்தனை காலத்துக்கு இதையே கேள்வி கேட்பீர்கள்.



நிருபர்: பா.ஜ., நெருக்கடிக்கு அ.தி.மு.க., அடி பணிந்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது?



சீமான்: குற்றச்சாட்டு இருக்கா? அதில் நான் என்ன சொல்வதற்கு இருக்கு, கூட்டணி குறித்து முடிவு எடுக்க வேண்டியது அ.தி.மு.க., அதன் தலைவர்கள். எல்லாத்துக்கும் நாம் கருத்து சொல்வது கண்ணியமாகவோ, நாகரீகமாகவோ இருக்காது.



மேலும் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: தி.மு.க.,-அ.தி.மு.க., இரண்டும் வேறு வேறு 'பார்ட்டி' ஆனால், 'பாலிசி' ஒன்று தான். ஊழல், லஞ்சம், சாராயம், கொலை கொள்ளை, மலையை வெட்டுவது, மணல் கொள்ளை எல்லாம் ஒரே மாதிரி தான். இரு தரப்பும் கச்சத்தீவை மீட்போம் என்பார்கள்.


டாஸ்மாக்கை மூடுவோம் என்பார்கள்; வந்தவுடன் வாயை மூடிவிடுவார்கள். இவர்களை ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்றார் காமராஜர். அந்த மட்டையை நார் நாராக திரிக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement