இணைப்பு சக்கரம் பொருத்திய பைக் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கல்

சோழிங்கநல்லுார்:தென்சென்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 70 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி, சோழிங்கநல்லுாரில் நேற்று நடந்தது.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், வாகனங்கள் வழங்கி பேசியதாவது:

தகுதியான அனைவருக்கும், இணைப்பு சக்கரம் பொருத்திய பைக் வழங்கப்பட்டு வருகிறது. தென்சென்னையில், 8.92 கோடி ரூபாயில், 868 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதனால், வீட்டில் முடங்கி கிடப்போர் வெளியே வருவதுடன், விருப்பமான வேலையை தேடி செய்ய முடியும். சுயதொழில் புரியவும் உதவுகிறது.

இதன்வாயிலாக, மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. எல்லோரையும் போல், பிடித்தமான இடங்களுக்கு செல்ல முடிவதுடன், தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. தென்சென்னையில், 6,656 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை, 1,009 பேருக்கு கல்வி உதவிதொகை, 197 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளர் உதவிதொகை வழங்கப்படுகின்றன. 452 பேருக்கு இதர உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியில், தென்சென்னை தி.மு.க.,- எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மண்டலக்குழு தலைவர்கள் மதியழகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement