கார் மோதி இளைஞர் பலி தப்பிய டிரைவருக்கு வலை

கும்பகோணம்:கார் மோதியதில் சாலையை கடந்தவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஞானவேலு மகன் லட்சுமணன், 22; எலக்ட்ரீஷியன். இவர், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

கடந்த 13ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, தன் உறவினரின், 2 வயது குழந்தையுடன் கடைவீதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அதிவேகமாக வந்த கார், லட்சுமணன் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றது.

இதில், சாலையில் இழுத்து செல்லப்பட்ட லட்சுமணன், அவரது கையில் இருந்த குழந்தை படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர், லட்சுமணனையும், குழந்தையையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்த லட்சுமணன், நேற்று முன்தினம் இறந்தார்.

நாச்சியார்கோவில் போலீசார் கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement