வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்குஉதவித்தொகை: விண்ணப்பம் வரவேற்பு


வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்குஉதவித்தொகை: விண்ணப்பம் வரவேற்பு


நாமக்கல்:'வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித்தொகை பெற, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எந்த வேலைவாய்ப்பும் கிடைக்காமல், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதந்தோறும், 200 ரூபாய்; தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய்; மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இனி வரும் காலங்களில், மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 600 ரூபாய்; மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய்; பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், பத்தாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், கடந்த, 1 முதல், வரும், ஜூன், 30 வரையிலான காலாண்டிற்கு, மேற்கண்ட கல்வி தகுதிகளை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டு முடிவுற்ற பதிவுதாரர்களும், ஓராண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள். தகுதியானவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement