விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் வேளாண் துறை செயலர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் வேளாண்துறை அரசு செயலர் தட்சணாமூர்த்தி ஆய்வு செய்தார்.

அப்போது, விவசாயிகளுக்கான வசதி, இருப்பு வைத்துள்ள விளை பொருள்கள் நிலை குறித்தும், தேசிய மின்னணு வேளாண் சந்தையின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், தினசரி விவசாயிகளின் வருகை, விளை பொருள்களை ஏலம் விடும் முறை, ஏல நடவடிக்கை, பணம் பட்டுவாடா விபரம் குறித்தும், அதிகாரிகள், விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் அளிக்க வேண்டும். பணம் பட்டு வாடா தாமதமின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, விழுப்புரம் உழவர் சந்தையை பார்வையிட்டார். அங்குள்ள உழவர் சந்தையை விரிவுபடுத்தி, சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கும்படியும், விவசாயிகள் விளைபொருள்கள் கொண்டுவர இலவச பஸ் வசதி, அடையாள அட்டை, காய்கறி சந்தை விலை நிர்ணயம் செய்திடவும் உத்தரவிட்டார்.

வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர், துணை இயக்குநர்கள் சீனுவாசன், சரவணன், விற்பனை கூட செயலர் சந்துரு உடனிருந்தனர்.

Advertisement