கொடிக்கம்பங்களால் போக்குவரத்துக்கு இடையூறு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் திம்மரசநாயக்கனூர் ஊராட்சி டி.பொம்மிநாயக்கன்பட்டியில் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இவ்வூரின் மையப் பகுதியில் வளைவான இடத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் 10 க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் உள்ளன. பொது இடங்களில் இடையூராக உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு கோர்ட் உத்தரவிட்டும் அகற்றும் பணியில் யாரும் முன் வரவில்லை.

பொதுமக்கள் கூறியதாவது: கொடிக்கம்பங்களால் இப்பகுதியில் ரோடு சுருங்கிவிட்டது. வாகனங்கள் சென்று திரும்புவதில் சிரமம் ஏற்படுவதால் இப்பகுதி வழியாக இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. தேனி - திம்மரசநாயக்கனூர், உசிலம்பட்டி, - மறவபட்டி பஸ்கள் டி.பொம்மிநாயக்கன்பட்டி வழியாக வந்து செல்லும். டவுன் பஸ்கள் வராததால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொடிக்கம்பங்களை அகற்றி மீண்டும் இக்கிராமத்திற்கு அரசு டவுன் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement