தோட்டக்கலை துறைக்கு வாட்ஸப் சேனல்; தினமலர் செய்தி எதிரொலி

கோவை; விவசாயிகளுக்கு வட்டார அளவிலான வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்படவில்லை என, 'தினமலர்' இதழில் செய்தி வெளியான நிலையில், தோட்டக்கலைத் துறை சார்பில் வாட்ஸ்அப் சேனல் நேற்று துவக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 தமிழக வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்குத் தேவையான சந்தை நிலவரம், தொழில்நுட்பம், மானிய அறிவிப்புகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற தகவல்களை விவசாயிகளுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்க்க, வட்டார அளவில் விவசாயிகளை உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், போதிய வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான செய்தி, நமது 'தினமலர்' நாளிதழில் வெளியானது.

இந்நிலையில், நேற்று, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், வாட்ஸ்அப் சேனல் துவக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாட்ஸ்அப் குழுக்களில் இந்த சேனலின் இணைப்பு பகிரப்பட்டு வருகிறது.

'இது வாட்ஸ்அப் சேனல் என்பதால், வட்டார அளவிலான வாட்ஸ்அப் குழுவுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயியும், பொதுமக்களும் இதனைப் பின்தொடரலாம். இந்த சேனல் துவக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும், வட்டார அளவிலான வாட்ஸ் அப் குழுவைத் துவக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement