தேவையற்ற கருத்துகளை சொல்லாதீங்க; வங்கதேசத்திற்கு இந்தியா கடும் கண்டனம்

3



புதுடில்லி: மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை தொடர்பாக கருத்து தெரிவித்த, வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.


மேற்கு வங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்கள் வன்முறையில் முடிந்தது. இதனை தடுக்க பலத்த பாதுகாப்புடன் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வன்முறை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த, வங்க தேசத்திற்கு இன்று கடும் எதிர்ப்பை தெரிவித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக, வங்கதேசம் தெரிவித்த கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது குறித்த இந்தியாவின் குற்றச்சாட்டை மூடி மறைக்க இது கபட நாடகமாகும். அங்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்.

தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு பதிலாக, வங்கதேசத்தில் சிறுபான்மை யினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement