ராஜபாளையத்தில் ரூ.பல லட்சம் மதிப்பில் புதுப்பித்தும் செயல்பாட்டிற்கு வராத நாய்கள் கருத்தடை மையம்

ராஜபாளையம்:

ராஜபாளையம் நகராட்சியில் நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகி உள்ள நிலையில் பல லட்சம் செலவில் புதுப்பித்துள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துஉள்ளனர்.

ராஜபாளையம் நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 42 வார்டுகளை கொண்ட நகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லாததால் இவற்றின் எண்ணிக்கை பெருகி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பராமரிப்பற்ற தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள அரசு வழிகாட்டுதல் இருந்து வரும் நிலையில் முறையான அமைப்பு இன்றி அறுவை சிகிச்சை பணிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் ராஜபாளையம் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த கால்நடை மருத்துவ குழுவினர் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தினர்.

கடந்த ஜன. மாதம் ராஜபாளையத்தில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த பயணிகள் 39 பேரை தெரு நாய் கடித்த சம்பவமும், ஏப்.3ல் சத்திரப்பட்டி பகுதியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் 6 மாணவர்கள் உட்பட 64 பேரை வெறி நாய் கடித்தது உள்ளிட்ட நிகழ்ச்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2012ம் ஆண்டு கால்நடைத்துறை கணக்கெடுப்பின்படி ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 611 தெரு நாய்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளாததால் நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துஉள்ளது.

இதனால் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட ராஜபாளையம் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Advertisement