எலான் மஸ்க் உடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி: அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் உடன் தொலைபேசியில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், 'டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசில், அரசு செலவினங்கள் துறையின் தலைமை பொறுப்பிலும் அவர் உள்ளார்.

இந்நிலையில், எலான் மஸ்க் உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி நேற்று பேசினார்.

அப்போது, இந்தியா - அமெரிக்கா இடையே தொழில்நுட்பம், புத்தாக்க கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:

எலான் மஸ்க் உடன் பேசினேன். இந்தாண்டு துவக்கத்தில், வாஷிங்டனில் சந்தித்த போது பேசிய பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் கலந்துரையாடினேன்.

தொழில்நுட்பம், புத்தாக்க கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில், ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம்.

இந்த துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

எலான் மஸ்கின் டெஸ்லா மின்சார கார் நிறுவனம், நம் நாட்டில் கால் பதிக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த உரையாடல் நடந்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, எலான் மஸ்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement