மாணவரை கடத்தி நகை, பணம் கேட்டு மிரட்டல் ஆட்டோ டிரைவர் உட்பட நால்வர் கைது

முத்தியால்பேட்டை, சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரான 17 வயது சிறுவனுக்கு, 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதளம் வாயிலாக, வாலிபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். நண்பராக பழகி வந்த அந்த நபர், சிறுவனிடம் முக்கிய விஷயம் பேச வேண்டும் எனக் கூறி, நேரில் அழைத்துள்ளார்.

சிறுவன் தன் உறவினரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, 'இன்ஸ்டா' நண்பர் கூறிய முத்தையால்பேட்டை, மதுரவாசல் தெருவில் உள்ள டீக்கடைக்கு, நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.

அங்கு நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். அப்போது, டீக்கடையில் நின்றிருந்த வாலிபர், அவசரமாக செல்ல வேண்டும் எனக் கூறி, சிறுவனிடம் 'லிப்ட்' கேட்டுள்ளார்.

சிறுவனும் வாலிபரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, அவர் கூறிய இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். திடீரென ஆட்டோ ஒன்று இருசக்கர வாகனத்தை வழிமறித்தது. அதில் வந்த வந்த மர்ம நபர்கள், கத்திமுனையில் சிறுவனை ஆட்டோவில் ஏற்றி கடத்தியுள்ளனர். பின், ஸ்டான்லி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிறுவனை தாக்கி, 'ஒரு வாரத்தில் ஒரு லட்ச ரூபாய் மற்றும் 100 கிராம் தங்க நகை கொடுக்க வேண்டும்' எனக்கூறி, மிரட்டல் விடுத்தனர். பின்னர் சிறுவனை அழைத்து வந்து, கடத்தப்பட்ட இடத்திலே இறக்கி விட்டு சென்றனர்.

இது குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர், முத்தையால்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஆட்டோவின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அயனாவரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வசந்தகுமார், 33, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த், 28, ராஜா ரஞ்சித், 31, விஜயகுமார், 30, ஆகியோர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. நான்கு பேரையும் நேற்று கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement