பெண் அடித்து கொலை போதை வாலிபர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே சாயர்புரம் பட்டாண்டிவிளையைச் சேர்ந்தவர் ஜெபா வயலட், 26. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்த இவர், 2022ல் அதே பகுதி லாரி டிரைவர் லிங்கராஜை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஜெபா வயலட் அடிக்கடி நீதிமன்றத்திற்கு சென்று வந்தார்.

அப்போது, கட்டபொம்மன் நகரை சேர்ந்த மாரிகனி, 25, என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார். ஜெபா வயலட்டை, மாரிகனி கடந்த 16ம் தேதி ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று தாலி கட்டியுள்ளார். பின், இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த மாரிகனி, அங்கு கிடந்த கம்பால் ஜெபா வயலட்டை தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். தென்பாகம் போலீசார் மாரிகனியை கைது செய்தனர்.

Advertisement