'ஸ்பா'வில் பணம், நகை பறிப்பு; 'போலி' போலீசார் அட்டகாசம்

நாமக்கல்:'ஸ்பா' சென்டரில் புகுந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல், போலீசார் எனக்கூறி அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், 40,000 ரூபாய் ரொக்கம், மூன்று மொபைல் போன், ஒன்றரை சவரன் நகையை பறித்துச்சென்றனர்.

நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், சேலம் மாவட்டம், மல்லுாரை சேர்ந்த இளங்கோவன், 'ஸ்பா' என்ற பெயரில் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

இந்த மையத்திற்கு, நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல், தங்களை போலீசார் எனவும், 'ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்' எனவும் கூறியுள்ளனர்.

திடீரென அங்கிருந்த பெண் ஊழியர்களை மிரட்டி, ஒரே அறையில் அடைத்து வைத்து, ஒன்றரை சவரன் நகை, அழகு நிலையத்தில் இருந்த, 40,000 ரூபாய் ரொக்கம், மூன்று மொபைல் போன்களை பறித்துக் கொண்டனர்.

'சிசிடிவி' கேமரா பதிவு கொண்ட டிஸ்கையும் எடுத்துக் கொண்டு தப்பினர். நாமக்கல் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இளங்கோவன் புகார்படி, நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement