ஹோலி கொண்டாட ரூ.1.22 லட்சம் செலவு: அரசு பணத்தில் தலைமை செயலர் 'தாம் துாம்'

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலர் பிரபோத் சக்சேனா, ஹோலி பண்டிகையை ஒட்டி அரசு அதிகாரிகளுக்கு, 1.22 லட்சம் ரூபாய்க்கு விருந்து வைத்து, 'பில்'லை அரசுக்கு அனுப்பி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளம்



ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு தலைமைச் செயலராக பிரபோத் சக்சேனா உள்ளார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவரின் பதவிக்காலம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர், ஹோலி பண்டி கையை ஒட்டி, கடந்த மாதம் அரசு அதிகாரி களுக்கு பிரமாண்ட விருந்து அளித்தார்.

சிம்லாவில், ஹிமாச்சல பிரதேச சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படும், 'ஹாலிடே ஹோம்' ஹோட்டலில் இந்த விருந்து கடந்த, 14ம் தேதி நடந்தது.

தலைமைச் செயலரால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட இந்த விருந்துக்கு, 1.22 லட்சம் ரூபாய் செலவானது. இதற்கான, 'பில்' தயாரிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் அரசு கணக்கு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட விருந்து என்பதால், பில்லுக்கான பணம் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது.

இந்நிலையில், அந்த விருந்துக்கான ரசீது, சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வெளியானது. இந்த விருந்தில் 1,000 ரூபாய் மதிப்பிலான ஒரு பிளேட், மதிய உணவு, 75 பேருக்கு வழங்கப்பட்டதாகவும், அரசு அதிகாரிகளின் ஓட்டுநர்கள் 22 பேருக்கு, 585 ரூபாய் மதிப்பில் உணவு வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜி.எஸ்.டி., வரி உட்பட 1.22 லட்சம் ரூபாய்க்கான அந்த பில்லை, அரசுக்கு தலைமைச் செயலர் அனுப்பி வைத்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

கடும் விமர்சனம்



ஹிமாச்சல பிரதேச அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், இந்த நிகழ்வுக்கு பா.ஜ.,உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பா.ஜ., - எம்.எல்.ஏ., பிக்ரம் சிங் கூறுகையில், “அரசுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்த நேரத்தில் இந்த ஊதாரித்தனமான செலவு தேவையா? அரசு அதிகாரிகளின் இதுபோன்ற நடத்தை, அப்பட்டமான விதிமீறல். பொதுமக்களின் பிரச்னைகளில் அக்கறை காட்டாமல் அரசு அலட்சியமாக செயல்படுவதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது,” என்றார்.

கடந்தாண்டு, ஹிமாச்சல பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் 12 ஹோட்டல்களை நஷ்டம் காரணமாக மூட, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவற்றை லாபகரமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்ததை அடுத்து, உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்த சூழலில், அரசு அதிகாரிகளின் ஆடம்பர விருந்துக்கு, 1.22 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Advertisement