நிலத்தகராறில் முதியவர் கொலை சகோதரர்கள் 2 பேர் கைது

நாகப்பட்டினம்:நிலத்தகராறில் முதியவர் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் சன்னாநல்லுார் அடுத்த ஏனங்குடியை சேர்ந்தவர் பாஸ்கரன்,68; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன்கள் கணேசன்,34, கார்த்தி,40; ஆகியோருக்கும் நிலப் பிரச்னை உள்ளது. இது தொடர்பான வழக்கில் பாஸ்கரனுக்கு சாதகமாக தீர்ப்பாகியுள்ளது.

இருப்பினும் கணேசன், நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இரு தரப்பையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். பாஸ்கரன் உடல் நலக்குறைவால், வக்கீல் மூலம் 10 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணேசன், கார்த்திக் இருவரும், பாஸ்கரன் வீட்டிற்கு சென்று, தகராறு செய்து தாக்கினர். அருகில் இருந்தோர் பாஸ்கரனை மீட்டு, சன்னாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாஸ்கரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகள் லாவண்யா,31; அளித்த புகாரின்பேரில், கணேசன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement