திருநெல்வேலி மாநகராட்சியில் செப்டிக் டேங்க் லாரிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் வீடுகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் செப்டிக் டேங்க் கழிவுகளை, தனியார் லாரிகள் அப்புறப்படுத்துகின்றன. இதற்காக மாநகராட்சி அனுமதியுடன் நுாற்றுக்கும் மேற்பட்ட செப்டிக் டேங்க் கிளீனிங் லாரிகள் இயங்குகின்றன.

ஆனால், இந்த லாரிகள் பெரும்பாலும் சேகரித்த கழிவுகளை மாநகராட்சியின்

ராமையன்பட்டி குப்பை கிடங்கு வளாகத்துக்குத் கொண்டு செல்லாமல், நகரத்தின் ஒதுக்குப்புற பகுதிகளில், குறிப்பாக தாழையூத்து - ரெட்டியார்பட்டி - டக்கரம்மாள்புரம் - கொங்கந்தான்பாறை போன்ற 4 வழிச்சாலை ஓரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் துாய்மையின்மை, துர்நாற்றம், தொற்றுநோய் பரவல் என சுகாதாரப் பிரச்னைகள் உருவாகின்றன.

பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும், அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், மாநகராட்சியின் அனுமதியுடன் செயல்படும் அனைத்து செப்டிக் டேங்க் லாரிகளிலும் ஜி.பி.எஸ்., கருவிகளை கட்டாயமாக பொருத்த வேண்டும் என மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, தற்போது ஜி.பி.எஸ்., கருவிகளை பொருத்தும் பணி தொடங்கியுள்ளதுடன், ஜி.பி.எஸ்., மூலம், குறிப்பிட்ட லாரி எங்கு சென்றது, எங்கு கழிவுகளை சேகரித்தது, எங்கு கழிவுகளை கொட்டியது என அனைத்தும் கண்காணிக்கப்படவுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளிடம் ஜி.பி.எஸ்., கண்காணிப்பு கடவுச்சொல் இருப்பதால், சந்தேகத்திற்கிடமான லாரிகளை கண்காணித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

Advertisement