ஆசிரியர் பணி வாங்கித்தருவதாக ரூ.88 லட்சம் மோசடியில் ஒருவர் கைது

தேனி:அரசு பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.88 லட்சம் மோசடி செய்த வழக்கில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சூரஜ் 30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மூர்த்திநாயக்கன்பட்டி ராமர்கோயில் தெரு சீரஞ்சீவி. இவரது தங்கை பவித்ரா. இவர் எம்.எஸ்சி., எம்.எட்., படித்து அரசு வேலைக்கு முயற்சி செய்தார். பவித்ராவின் கணவர் ஜெகதீசனிடம், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு வடக்கு காந்திநகரை சேர்ந்த சூரஜ் நண்பராக அறிமுகமானார். அவர் ஜெகதீசனிடம், ‛தனக்கு பல அரசியல்வாதிகள் தெரியும். பலருக்கு அரசுப்பணி வாங்கி கொடுத்துள்ளேன்,' என்றார்.

ஜெகதீசன் தனது மனைவியின் சகோதரர் சீரஞ்சீவியை தொடர்பு கொள்ளக் கூறினார். சீரஞ்சீவியை தொடர்பு கொண்ட சூரஜ், வத்தலக்குண்டு அரசுப் பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணி பெற்றுத்தர ரூ.50 லட்சம் கேட்டார். ரூ.43.87 லட்சத்தை வங்கிக்கணக்கு மூலம் சீரஞ்சீவி அனுப்பினார். பின், பவித்ராவின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு பணி நியமன ஆணையை சூரஜ் அனுப்பி வைத்தார்.

அதில் கோவை அரசு பள்ளிக்கு பணி ஆணை கிடைத்துள்ளதாகவும், அதனை வத்தலக்குண்டுக்கு மாற்ற மேலும் ரூ.35 லட்சம் தேவை என்றார். இதனால் மீண்டும் ரூ.44.14 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார். மொத்தம் ரூ.88 லட்சம் பெற்ற, சூரஜ், அவரது தாய் சுமதி ஆகியோர் இணைந்து பவித்ராவிற்கு வழங்கியது போலி பணி ஆணை என தெரியவந்தது. இதையடுத்து எஸ்.பி., சிவபிரசாத்திடம் சிரஞ்சீவி புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் ஆகியோர் சூரஜை நேற்று கைது செய்தனர்.

Advertisement