கூட்டுறவு இயக்கத்துக்கான பாடல் ரூ.௫௦,௦௦௦ பரிசு வெல்ல வாய்ப்பு

ஈரோடு,
கூட்டுறவு இயக்கத்துக்கான சிறந்த பாடலுக்கு, ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.

ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தாண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாக, உலகளவில் கொண்டாடும் நிலையில், கூட்டுறவு பற்றி தனித்துவ பாடல்கள், ஈரோடு மாவட்ட பொதுமக்கள், கூட்டுறவு பணியாளர்கள், துறை அலுவலர்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. அப்பாடல்கள் இசையமைக்கப்பட்டு, 5 நிமிடங்கள் ஒளிபரப்பக்கூடிய வகையில், பாடல் வரிகள் இருக்க வேண்டும். கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள், தமிழில் இருக்க வேண்டும். ஜாதி, மத, அரசியல் அமைப்பு சாராது இருக்க வேண்டும்.
கூட்டுறவு பற்றி எழுச்சி, உத்வேகம் ஏற்படுத்த வேண்டும். அப்பாடலை எழுதி கூரியர் அல்லது தபால் மூலம், 'மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.நடராசன் மாளிகை, 170 பெரியார் ஈ.வெ.ரா., நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை - 600010' என்ற முகவரிக்கும், பாடலின் 'சாப்ட் காப்பியை' தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின், 'tncu08@gmail.com' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும், 30 மாலை, 5:00 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். சிறந்த பாடலுக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கான பண முடிப்பு, கேடயம் வழங்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement