பாசிப்பயறு கொள்முதல் துவக்கம்விவசாயிகள் பயன்பெற அழைப்பு



நாமக்கல்:'மாவட்டத்தில் பாசிப்பயறு கொள்முதல் துவங்கப்பட்டுள்ளது. அதில், விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்று பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும், தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பாசிப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், பாசிப்பயறு விளைபொருளை மத்திய அரசின், 'நாபெட்' நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.


தற்போது, உள்ளுர் சந்தைகளில் பாசிப்பயறு கிலோ ஒன்றுக்கு, 65 முதல், 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி குறைந்தபட்ச ஆதரவு விலையில் (கிலோ ஒன்றுக்கு, 86.82 ரூபாய்-) கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயறு கொள்முதல் திட்டம், நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக கூடத்தில் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள், தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விபரங்களுடன், நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், பாசிப்பயறு விளைபொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கொள்முதல் காலம், வரும், ஜூன், 12 வரை நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது கொள்முதல் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் நலன் கருதி, அரசு துவங்கி உள்ள இந்த திட்டத்தில், விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement