நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்புநிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்




நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில் உள்ள நீர்வழிப்பாதையில் மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது.


நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் இருந்து ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து செல்லும் வழியில், குறுக்கே எல்லைபள்ளத்தாறு ஓடை உள்ளது. இதன் பெயர் போலவே, சிற்றாறு அளவுக்கு நீளம், அகலம், ஆழம் இருந்தது. மூலப்பள்ளிப்பட்டி, பசிறு மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், இந்த ஆறு வழியாகத்தான் வடுகம் ஏரிக்கு செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.



தற்போது, இந்த ஓடையில் மண், குப்பைகளை கொட்டி ஆக்கிரமித்து வருகின்றனர். ஓடையின் அளவு மிகவும் சிறியதாக மாறிவிட்டது. ஓடையிலேயே மின்சாரத்துறையினர் ஆக்கிரமிதது டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ளனர். ஓடை முழுவதும் முள் புதர்கள், மரங்கள் என வளர்ந்துவிட்டன. எனவே மழைக்காலங்களில் இந்த ஓடையில் தண்ணீர் வருவதே இல்லை. ஓடையில் தண்ணீர் இல்லாததால், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே, நீர் வழித்தடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும். அப்போதுதான், மழை காலத்தில் இவ்வழியாக தண்ணீர் செல்லும், விவசாய நிலங்களில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயரும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement