சவுக்கு சங்கர் மீதான அவதுாறு வழக்கு  50 பேரிடம் கோவை போலீசார் விசாரணை 

கோவை:சவுக்கு சங்கர் மீதான அவதுாறு வழக்கில், கோவை சைபர் கிரைம் போலீசார் 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், 80 பேரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

பெண்களை பற்றி இழிவாக பேசியதாக, 'யூ டியூபர்' சவுக்கு சங்கர் மீது, கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் உட்பட, பல்வேறு ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் பெண் போலீஸ் ஒருவர் அளித்த புகாரில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, பல்வேறு புகார்களில் சவுக்கு சங்கர் மீது கோவை, திருச்சி, சேலம், முசிறி, ஊட்டி, நாகப்பட்டினம் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண் போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தனர். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதவிர, சவுக்கு சங்கர் மீது, தேனி மாவட்ட போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர்.

தன் மீது உள்ள அனைத்து வழக்குகளையும், ஒரே இடத்திற்கு மாற்ற, சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, சவுக்கு சங்கர் மீது திருச்சி, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், ராணிபேட்டை, திருச்சி மாநகர், பெரம்பலுார், சிவகங்கை, தாம்பரம், சேலம் மாநகர், சென்னை, நாகப்பட்டினம், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் பதியப்பட்ட, 15 வழக்குகள், கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது.

மாற்றப்பட்ட வழக்குகளின், பழைய எப்.ஐ.ஆர்.,களை மறுபதிவு செய்து, புதிதாக வழக்கு பதிவு செய்து, கோவை போலீசார் விசாரணையை துவங்கினர்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை பதிவு செய்து, விசாரித்த போலீஸ் அதிகாரிகள் உட்பட 50 பேரிடம், கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், 80பேரிடம் விசாரணை நடத்த உள்ளனர். சவுக்கு சங்கரையும் நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement