பண்டிப்பூர் சபாரி ஜீப் முன் 'ஹாயா'க வந்த புலி

சாம்ராஜ்நகர்: பண்டிப்பூர் தேசிய பூங்காவில், சபாரி வாகனத்தின் அருகிலேயே புலி நடமாடியதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி அடைந்தனர்.

வனப்பகுதிகளில் சபாரி செல்லும்போது, சிறுத்தைகள், யானைகள், காட்டெருமை போன்ற விலங்குகள் நடமாட்டத்தை காணலாம். ஆனால் புலிகளை காண்பது அபூர்வம். புலியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செல்லும் சுற்றுலா பயணியர், ஏமாற்றத்துடன் திரும்புவர். எப்போதாவது அரிதாக புலி தென்படும்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில் உள்ள பண்டிப்பூர் தேசிய பூங்காவில், நேற்று முன் தினம் சபாரி பாதையில், சுற்றுலா பயணியர் இருந்த ஜீப் மற்றும் அதிகாரியின் வாகனம் சென்றபோது பாதையின் நடுவில் புலி நின்று கொண்டிருந்தது. புலி வலுவான விலங்கு என்றாலும், மனிதர்களை கண்டால் ஓடி மறைந்து விடும். இதற்கு முன்பு பண்டிப்பூரில் இருந்த பிரின்ஸ் என்ற புலி, சுற்றுலா பயணியரை கண்டால் விலகி ஓடாமல், அருகிலேயே வரும். அதே போன்று நேற்று முன் தினம் பீமா என்ற புலி, சபாரி வாகனத்தின் முன் வந்தது.

ஓட்டுநர் ஜீப்பை பின்னுக்கு கொண்டு செல்ல, புலியும் முன்னேறி வந்தது. அதன்பின் அருகில் இருந்த நீர் நிலைக்கு சென்று, உடலை நனைத்து அமர்ந்து கொண்டது. புலியை பார்த்த சுற்றுலா பயணியர் குஷி அடைந்தனர். தங்கள் மொபைல் போனில் புலி நடந்து செல்வதை வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

பண்டிப்பூரின் சபாரி பாதையின் பெட்டதகட்டேவில் இருந்து, மங்களா ஏரி வரை தன் இருப்பிடமாக்கிய பீமா புலி, அவ்வப்போது சுற்றுலா பயணியருக்கு காட்சியளித்து மகிழ்விக்கிறது.

Advertisement