காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கும் பணி மும்முரம்

உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, கருவேப்பம்பூண்டி கிராமத்தில் விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் 1,000 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது ஆகும்.

இக்கோவிலில், சிவராத்திரி, மாசி மகம், பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். இங்கு சிவன்பெருமான் காசி விஸ்வநாதராகவும், பார்வதி அம்பாள் விசாலாட்சி அம்பாளாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இந்த கோவில் வளாகத்தில் விநாயகர், முருகன் ஆகியோருக்கு உபசன்னிதிகள் உள்ளன. இந்நிலையில், கோவில் முறையாக பராமரிப்பு இல்லாமல், மூலவர் சன்னிதி, அம்பாள் சன்னிதி, உப சன்னிதிகள், மகா மண்டபம், சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து இருந்தன.

இதை புதுப்பிக்க பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், பொதுநல நிதியின் கீழ், 1.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது, கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. அதில், மூலவர் சன்னிதி, மகா சன்னிதி, அம்பாள் சன்னிதி ஆகியவை கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த கோவிலை புதுப்பிக்கும் பணிகள் 2025க்குள் முடிக்கப்படும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement