நெல் சாகுபடிக்கு பின் பயறு சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே கும்பரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு பின் பயிர் சாகுபடி செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் தலைமை வகித்தார்.

வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.

நெல் சாகுபடிக்கு பின் உளுந்து, பச்சை பயறு போன்றவைகளை சாகுபடி செய்தல் வேண்டும். சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்தல், பூக்கும் தருணத்தில் அசிட்டிக் ஆசிட் எனும் வளர்ச்சி ஊக்கியை தெளித்தல் மற்றும் ஒண்டர் எனப்படும் சத்துக்கள் அடங்கிய பவுடரை பூக்கும் தருணத்தில் தண்ணீரில் கலந்து இலை வழியாக தெளிக்கும் போது நன்கு காய் பிடித்து மகசூல் அதிகரிக்கும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டாம் போக சாகுபடியாக சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் சாகுபடி செய்ய வேண்டும் எனவும், மிகக் குறைந்த நீர் ஆதாரத்திலேயே வளரக்கூடிய சிறப்பம்சம் வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது.

உச்சிப்புளி வேளாண் அலுவலர் மோனிஷா கூறுகையில், வேளாண் அடுக்ககம் திட்டத்தில் விவசாய அடையாள எண் பதிவு தரவு பணி நடந்து வருகிறது.

ஏப்., 30 பதிவு செய்ய கடைசி நாள். எனவே விவசாயிகள் அடையாள எண்ணை அருகில் உள்ள வேளாண் விரிவாக்கம் மையம் அல்லது பொது இ-சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

பயிற்சியில் துணை வேளாண் அலுவலர் தாமஸ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சோனியா செய்திருந்தார்.

Advertisement