ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது

ஹாவேரி : ஆசிரியருக்கு நிலுவையில் உள்ள தொகையை விடுவிக்க, 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டு, 15,000 ரூபாய் வாங்கிய பிளாக் கல்வி அதிகாரியை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.

ஹாவேரியில் அரசு ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரதாப் பர்கி. இவருக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, பிளாக் கல்வி அதிகாரி மவுனீஷ் படிகரை சந்தித்தார்.

பணத்தை விடுவிக்க, மவுனீஷ் படிகர், 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சரி என்று கூறிய ஆசிரியர் பிரதாப் பர்கி, ஹாவேரி லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார்.

அவர்களின் ஆலோசனைப்படி, நேற்று காலையில் பசவேஸ்வர நகரில் உள்ள மவுனீஷ் படிகர் வீட்டிற்கு ஆசிரியர் பிரதாப் பர்கி சென்றார். அவரிடம் முதல்கட்டமாக 15,000 ரூபாய் கொடுத்தார்.

பணத்தை மவுனீஷ் படிகர் வாங்கியபோது, லோக் ஆயுக்தா போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். அவருக்கு உதவியாக இருந்த அவரது வாகன ஓட்டி பாபு பூமப்பா உதயத், ஆசிரியர் மல்லிகார்ஜுன கம்பரகேரி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement