ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த நடைமேடை சேதம்: குடிமகன்கள் ரகளை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை நடைபாதையில் உள்ள கிரானைட் கல் இருக்கைகள் உடைக்கப்பட்டு காலி மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மாலை நேரத்தில் பொழுது போக்க வசதியாக மத்திய சுற்றுலா நிதியில் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் ரூ. 2 கோடியில் 300 மீ.,க்கு ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் நடைபாதை அமைத்தது.

இந்த நடைபாதையில் மக்கள் கடற்கரை அழகை கண்டு ரசிப்பதுடன், ராமாயண வரலாற்றை நினைவுகூறும் வகையாக தத்ரூபமான ஓவிய படங்களும் நடைபாதையில் உள்ளன.

இதனை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பயன்படுத்தி பொழுது போக்கினர்.

ஆனால் இரவில் நடைபாதையில் குடிமகன்கள் அமர்ந்து மதுபோதையில் கூச்சலிட்டு ரகளை செய்கின்றனர். மேலும் நடைபாதையில் உள்ள கிரானைட் கல் இருக்கைகள், தடுப்புச் சுவர் கம்பிகளை உடைத்து சின்னாபின்னமாக்கி உள்ளனர்.

காலி மது பாட்டில்களை நடைபாதையில் வீசுவதால் உடைந்து கிடக்கிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே நடைபாதையில் இரவில் ரகளை செய்யும் குடிமகன்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதையை பராமரிக்க நகராட்சி முன்வர வேண்டும்.

Advertisement