மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ; ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் சிக்கல் 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைப் பகுதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் ஆம்புலன்ஸ்கள், நோயாளிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மதுரை ரோட்டில் உள்ளது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக மாறிய பின் பாதுகாப்பு காரணங்கள் கருதி கிழக்குப்புறம் இருந்த பழைய நுழைவு வாயிலை நிரந்தரமாக மூடிவிட்டனர். இதனால் மேற்கு பகுதியில் கட்டப்பட்ட புதிய நுழைவு வாயில் மட்டுமே திறந்துள்ளது.

ஒரே வாசலில் வாகனங்களும், நோயாளிகளும் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்துவமனைப்பகுதியில் பஸ் ஸ்டாப் உள்ளதால் அங்கு பஸ்களை நிறுத்துவதால் வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நெரிசலில் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்களும் சிக்கிக்கொள்கின்றன. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உயிரிழப்பு ஏற்படும்அபாயம் உள்ளது. போக்குவரத்து போலீசார் இருந்தும் வாகனங்களை ஒழுங்கு படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வர போக்குவரத்து போலீசாரும், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள பஸ்ஸ்டாப்பை சற்று தொலைவில் வேறு பகுதிக்கு மாற்றி அமைக்கலாம்----------- என பொதுமக்கள் தெரிவித்தனர்.--

Advertisement