'மினி டைடல் பார்க்' பணிகள் திருப்பூரில் 2 மாதத்தில் நிறைவு

திருப்பூர் திருப்பூரில், 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் 'மினி டைடல் பார்க்' கட்டுமானப்பணி, இரு மாதத்தில் நிறைவு பெற உள்ளது.

தகவல் தொழில்நுட்ப துறையில், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், மாநிலத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ள நகரங்களில், 'மினி டைடல் பார்க்' அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 'திருப்பூர், சேலம், தஞ்சை, துாத்துக்குடி, வேலுார் உள்ளிட்ட இடங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும்' என, கடந்த, 2022 மார்ச் மாதம், அப்போதைய நிதி அமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், திருமுருகன்பூண்டியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் மினி டைடல் பார்க்க அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதிகாரிகள் கூறியதாவது:

மொத்தம் 40 கோடி ரூபாய் செலவில், நிலத்தடி, தரைதளம் உட்பட, 9 அடுக்கு கட்டடமாக டைடல் பார்க் உருவெடுத்துள்ளது. 'டைடல் பார்க்' கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் ஒரே சமமாக இல்லாமல், ஓரிடத்தில் பாறை மற்றொரு இடத்தில் லகுவான மண் என, மாறுபட்டு இருந்ததால், வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்து, கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது முடியும் தருவாயை எட்டியுள்ளது. 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட வேண்டியுள்ளது. மின் வாரியத்தினர், 'டிரான்ஸ்பார்மர்' பொருத்தி மின் இணைப்பு வழங்கியவுடன் மின் வினியோக செயல்பாடுகளை சரி பார்த்து, உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. வரும், ஜூன் மாதம் பணிகளை முழுமையாக முடிக்கும் வகையிலான திட்டமிடலுடன் பணி செய்து வருகிறோம்.ஏழு நிறுவனங்கள் செயல்படும் வகையில் வடிவமைப்பு உள்ளது. இரு நிறுவனங்கள் இணைந்து ஒரு கட்டடத்தை பயன்படுத்திக் கொள்ள முன்வந்தாலும் அனுமதி வழங்க வாய்ப்புண்டு. ஏற்கனவே, ஒரு நிறுவனம் 'புக்கிங்' செய்து, 'இன்டீரியர்' பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement