முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு, மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, மோப்பநாய் உதவியுடன், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீடுகள் மற்றும் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ-மெயில் வந்தது. அதே நேரத்தில், புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கும் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

அதில், கடற்கரை சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டல், ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள தனியார் ஹோட்டல், கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்தடுத்து வந்த மிரட்டல்களால் அதிர்ச்சியடைந்த போலீசார், சோதனையை தீவிரப்படுத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் ராம் மற்றும் சோனி உடன் திலாசுப்பேட்டை, வீமன் நகரில் அப்பா பைத்தியசாமி கோவில் வளாகம் மற்றும் விநாயகர் கோவில் தெருவில் உள்ள முதல்வரின் இரு வீடுகளையும் முழுமையாக சோதனையிட்டனர். மூன்று ஹோட்டல்களிலும் சோதனை நடத்தினர்.

இதில், மிரட்டல் வெறும் புரளி என, தெரியவந்தது.

புதுச்சேரியில் சில நாட்களாக அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Advertisement