திரிபுரா எல்லையில் வங்கதேச அணை; வெள்ள அபாயத்தால் மக்கள் அச்சம்

1

பிலோனியா : எல்லை பகுதியில் ஒன்றரை கி.மீ., நீளத்திற்கு வங்கதேச அரசால் கட்டப்படும் அணையால், மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக திரிபுரா மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் மூன்று எல்லை பகுதியில், நம் அண்டை நாடான வங்கதேசம் அமைந்துள்ளது.


திரிபுராவுடன் 857 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொள்ளும் வங்கதேசம், இந்த மாநிலத்தை ஒட்டிய தன் எல்லையில் அணைகளை கட்டி வருகிறது. தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள பிலோனியா நகரை ஒட்டி, வங்கதேச எல்லையில் கட்டப்பட்டு வரும் அணையின் பெரும்பாலான பகுதிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.


முஹுரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இந்த அணை, இரு நாட்டு எல்லை ஒப்பந்தங்களுக்கு எதிராக உள்ளதாக பிலோனியா மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இந்த அணை 20 அடி உயரத்தில், ஒன்றரை கி.மீ., நீளத்தில் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்த மக்கள், இதற்கு தேவையான வடிகால் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறியுள்ளனர்.


இதுகுறித்து பிலோனியா பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'சர்வதேச எல்லை ஒப்பந்தத்தை மீறி அணை கட்டப்பட்டு வருகிறது. இரவு பகலாக நடக்கும் பணியில், 10க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 'கனமழை பெய்தால், இந்த அணையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது' என்றார்.


இந்த அணைக் கட்டப்படுவது குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் திரிபுரா அரசு மற்றும் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்திஉள்ளனர்.

Advertisement