2 வார்டுகளுக்கு மட்டும் காவிரி குடிநீர்; நவப்பட்டியில் மற்ற பகுதி மக்கள் அவதி

மேட்டூர்: கொளத்துார் ஒன்றியத்தில், 14 ஊராட்சிகள் உள்ளன. அதில் நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி ஊராட்சிகள் காவிரி கரையோரம் உள்ளன. இதர, 12 ஊராட்சிகளில், மத்திய அரசின் 'ஜல்சக்தி' திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி ஊராட்சிகள் விடுபட்டுள்ளன.

நவப்பட்டியில், 12 வார்டுகளில், 8,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதில், 2வது வார்டு மாதையன்குட்டை, 12வது வார்டு பெரும்பள்ளம், ஜெ.ஜெ., நகருக்கு மட்டும் ஒருநாள் விட்டு ஒரு நாள், 30,000 லிட்டர் காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது.

இதர, 10 வார்டுகளுக்கும் நிலத்தடி நீர் மட்டும், ஊராட்சி மூலம் வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம், 3வது வார்டு நாட்டாமங்கலம் பகுதிக்கு குடிநீர் வாரிய ஊழியர்கள் சென்றனர். அவர்கள் அப்பகுதியில், 30 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட பழைய குழாய்களில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முயன்றனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஊழியர்கள் புறப்பட்டனர்.

இதுகுறித்து நவப்பட்டி மக்கள் கூறுகையில், 'ஏற்கனவே பதிக்கப்பட்ட பழைய, சேதம் அடைந்த குழாய்களை முழுமையாக அகற்றி விட்டு, மக்கள் தொகை அதிகரிப்பு, தேவைக்கு ஏற்ப, 2 அங்குல குழாய் பதித்து குடிநீர் வழங்க வேண்டும். நிலத்தடி நீரை மட்டும், 10 வார்டு மக்கள் குடிப்பதால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதை தடுக்க காவிரி நீரை சுத்திகரித்து வழங்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement