இறந்ததாக மூதாட்டி ரேஷன் கார்டு ரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கு உத்தரவு

ஷிவமொக்கா: உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்துவிட்டதாக கூறி, நான்கு ஆண்டாக ரேஷன் பொருட்கள் வழங்காமல் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் மது பங்காரப்பா உத்தரவிட்டார்.

ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகரில் நேற்று மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் துவக்கக் கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா பேசியதாவது:

மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில், மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் கலந்து கொள்வதால், மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைத்துவிடும்.

பிரச்னைகளுக்கு தீர்வு காண பல சட்டங்கள் உள்ளன. இந்த வசதியை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வரும் நாட்களில் அனைத்து தாலுகாவிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படும்.

முதல்வர் சித்தராமையாவும், பல மாவட்டங்களுக்கு சென்று, பொது மக்கள் குறைகளை கேட்பார். நிர்வாக சீரமைப்பிற்கு இது முக்கியத்துவம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது, மலவள்ளியை சேர்ந்த 80 வயது பர்வதம்மா, அமைச்சர் மது பங்காரப்பாவிடம், 'நான் இறந்துவிட்டதாக கூறி ரேஷன் கார்டை ரத்து செய்துவிட்டனர். 2021ம் ஆண்டு முதல் ரேஷன் பொருட்கள் வழங்குவதில்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன்.

எனக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட அமைச்சர், மூதாட்டியின் ரேஷன் கார்டை ரத்து செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் குருதத்தா ஹெக்டேவுக்கு உத்தரவிட்டார்.

Advertisement