54 மடங்கு கட்டணம் ஏன்? வழக்கறிஞர் விளக்கம்

சென்னை, 'வெளிவட்ட சாலை நில எடுப்பு தொடர்பான மேல்முறையீட்டில், 54 மனுக்களை தாக்கல் செய்யவே தனித்தனி கட்டணம் கோரப்பட்டது. அது, வழக்கறிஞருக்கான கட்டணம் அல்ல' என, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி. இந்திரா தெரிவித்தார்.

சென்னை வெளிவட்ட சாலைக்கு நிலம் எடுப்பதில், இழப்பீட்டை முடிவு செய்வது தொடர்பான வழக்கில், சி.எம்.டி.ஏ., நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த விவகாரத்தில், ஒரு வழக்குக்கு, 54 மடங்கு கட்டணம் கோரப்பட்டது தொடர்பாக, நம் நாளிதழில், ஏப்., 21ல் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.இந்திரா அளித்துள்ள விளக்கம்:

வெளிவட்ட சாலை நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், 54 பேர் எதிர் மனுதாரர்களாக உள்ளனர். ஒவ்வொருவருக்கும் நிலத்தின் அளவு, சர்வே எண், இழப்பீட்டு தொகை வேறுபட்டு உள்ளது. இதனால், இவர்கள் அனைவருக்கும் சேர்ந்து, ஒரே மனுவை தாக்கல் செய்வது நடைமுறைக்கு ஒத்துவராது.

எனவே, ஒவ்வொருவருக்காகவும் தனித்தனி மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக தான் தனித்தனி கட்டணம் கோரப்பட்டுள்ளது.

இது, 54 வழக்குகளின் பதிவுக்கான நீதிமன்ற செலவு தொகை மட்டுமே; வழக்கறிஞருக்கான கட்டணம் அல்ல. இதில் வழக்கறிஞருக்கு, 54 மடங்கு கட்டணம் கோரப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

Advertisement