அக் ஷய திருதிக்கு தங்கம் வாங்க முன்பதிவு விறுவிறு; விலை அதிகரித்தும் மவுசு குறையல

1

சென்னை: தமிழகத்தில், தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வரும் நிலையிலும், அக் ஷய திருதியைக்கு நகை வாங்க, பலரும் முன்பதிவு செய்து வருவதால், தங்கம் விற்பனை வழக்கம் போல உள்ளது.


தமிழக மக்களிடம் அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம், மேலும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், அந்நாளில் தங்கம் வாங்குவதை, பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.


தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் விலை, 9,000 ரூபாயையும், சவரன், 72,000 ரூபாயையும் தாண்டியுள்ளது.


ஆண்டுக்கு சராசரியாக சவரனுக்கு, 5,000 ரூபாய் உயரும் தங்கம், கடந்த நான்கு மாதங்களில், 15,000 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று கிராம், 9,005 ரூபாய்க்கும், சவரன், 72,040 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.


இந்நிலையில், அக் ஷய திருதியை நாள், 30ம் தேதி வருகிறது. தங்கம் விலை உயர்ந்த நிலையில், அக் ஷய திருதியைக்கு நகை வாங்க வேண்டும் என்பதற்காக, பலரும் கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், தங்க நகை விற்பனை பாதிக்கப்படவில்லை.


இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ''தங்கம் விலை வரும் நாட்களில், மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. அதனால், தற்போது நகைக்கடைகளுக்கு வந்து, அக் ஷய திருதியைக்கு நகை வாங்க, முன்பதிவு செய்கின்றனர். அக் ஷய திருதியைக்கு தங்க நகை வாங்க முன்பதிவு நன்றாக உள்ளது,'' என்றார்.

Advertisement