வனப்பகுதியில் பட்டா வழங்க பகுதி சபா குழு கூட்டத்தில் மனு

கூடலுார்: குமுளி அருகே தமிழக வனப் பகுதியான பாண்டிக்குழியில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி லோயர்கேம்பில் நடந்த பகுதி சபா குழு கூட்டத்தில் மனு வழங்கினர்.

கூடலுார் நகராட்சியில் 21 வது வார்டு லோயர்கேம்பில் பகுதி சபா குழு கூட்டம் தலைவர் தினகரன் தலைமையில் நடந்தது. நகராட்சி மேலாளர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் முரளிகுமார், நகர அமைப்பு ஆய்வாளர் (பொறுப்பு) கணேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழக வனப் பகுதியான குமுளி அருகே பாண்டிக்குழியில் பல தலைமுறையாக ஏலம், மிளகு உள்ளிட்ட விவசாயம் செய்த விவசாயிகளுக்கு பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு வழங்கப்பட்டது.

மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவின்படி பாண்டிக்குழி வனப்பகுதியில் விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் உண்மைத் தன்மையை ஆராயும் வகையில் சிறப்பு பகுதி சபா கூட்டம் நடத்தப்பட்டதாகவும் அதில் விவசாயிகளின் மனுவைப் பெற்று தேனி மாவட்ட நிர்வாகம், வனத்துறைக்கு அனுப்ப உள்ளதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் கூறும் போது, ' நான்கு தலைமுறைகளாக பாண்டிக்குழி வனப்பகுதியில் ஏலம், மிளகு, பலா உள்ளிட்ட விவசாயம் செய்து வந்ததாகவும் பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அதற்கான முழு ஆவணங்களையும் இணைத்து மனு வழங்கியுள்ளோம்' என்றனர்.

Advertisement