யானை தந்தத்தை விற்க முயற்சி; அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உள்பட 7 பேர் கைது

சென்னை; சென்னையில் யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
சென்னை தி. நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்(58). சவுகார்பேட்டையில் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் கடையில் மாஜி ஐ.ஜி., மகன் மைக்கேல் என்பவர் 5 லட்சம் ரூபாய்க்கு 2 யானை தந்தங்களை அடமானம் வைத்துள்ளார்.
ஆனால் பணம் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் முடிந்தும், தந்தங்களை மீட்க மைக்கேல் மீட்கவில்லை. இதையடுத்து, பிரபாகரன் தந்தங்களை தரகர் மூலம் விற்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்த தகவல் கிடைத்த சுங்கத்துறை அதிகாரிகள், மாஜி ஐ.ஜி., மகனை தொடர்பு கொண்டு நகைக்கடை உரிமையாளரை அணுகி இருக்கின்றனர். தந்தங்கள் ரூ.50 லட்சத்துக்கு விலை பேசப்பட்டன.
கடத்தல்காரர்கள் போல சுங்கத்துறை அதிகாரிகள் நாடகமாடி பிரபாகரன், அவரது மகன் திவாகர், தரகர் சுரேஷ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். பின்னர் 7 பேரையும், யானை தந்தங்களையும் வனத்துறை அதிகாரிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.