ஆன்லைன் வாயிலாக ரூ.50.92 லட்சம் மோசடி சென்னையை சேர்ந்தவர் கைது

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு சந்திர நகரைச்சேர்ந்தவர், ஆன்லைன் வாயிலாக டிரேடிங் செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி ஏமாற்றி 50.92 லட்சம் ரூபாய் பணம் பறித்துவிட்டனர் என பாலக்காடு சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், மாவட்ட எஸ்.பி., அஜித் குமாரின் அறிவுரையின்படி, டி.எஸ்.பி., பிரசாத்தின் மேற்பார்வையில், சைபர் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் நடத்திய விசாரணையில், சென்னை பெருமாந்தநல்லுார் பகுதியைச்சேர்ந்த சுப்பிரமணியன் 39, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் சசிகுமார் கூறியதாவது:

கடந்த 2024 ஜூன் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. டெலிகிராம் வழியாக புகாரதாரரை தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தபடியே 'ேஷர் டிரேடிங்' செய்து பணம் அதிகமாக சம்பாதிக்கலாம் என வாக்குறுதி அளித்துள்ளார்.

'டெபாசிட்' தொகையாக ரூ. 50.92 லட்சத்தை வாங்கி சுப்ரமணியன், ஏமாற்றியுள்ளதும் மோசடிக்காக மட்டுமே பயன்படுத்தும் வங்கிக்கணக்கில், இப்பணத்தை, சுப்ரமணியன், அவருடைய பெருங்களத்துார் என்ற இடத்தில் உள்ள வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளதும் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து அவரை கைது செய்துள்ளோம். இதுபோன்ற மோசடிகள் நடந்தாலோ, மோசடி முயற்சி நடப்பது தெரிந்தாலோ, உடனடியாக தேசிய சைபர் குற்றப் புகார் பிரிவின் '1930' என்ற இலவச எண்ணில் அல்லது மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement